• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

10 - உறையுள் உறையும் உதிரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 17
  • Views Views 2K
Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
804
Reaction score
4,616
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
உறையுள் உறையும் உதிரம் 10
View attachment 679
சென்னை. காலை பத்து மணி. மெரீனா கடற்கரையையும் வங்கக்கடலையும் பார்த்தபடி கம்பீரமாக நிற்கும் ஐஜி’ஸ் அலுவலகமே பரபரப்பாக இருந்தது.

போலீஸ் இலாகா முதலமைச்சரிடம் இருப்பதால் அவரது பிரதிநிதியாக வரவிருக்கும் உள்துறை அமைச்சருக்காக ஐஜி முதல் கடைநிலை கான்ஸ்டபிள் வரை கூடுதல் விறைப்போடு காத்திருந்தனர்.

செந்நிற சுழல்விளக்கு சுழல அரசாங்க வாகனம் வந்து நின்றதுமே, மரியாதை நிமித்தமான சல்யூட்டைக் கொடுத்த ஐஜி மற்றும் உயரதிகாரிகள் சிலரும், அமைச்சரை வரவேற்று கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு அழைத்துச் சென்றனர். பூரணகும்பம் மட்டும்தான் மிஸ்ஸிங்!

அங்கே இருந்த நீள்வட்ட வடிவ மேஜையில் ஐஜி, கமிஷனர் ஜார்ஜ் செபாஸ்டியன், ஏசிபி பிரதாப் சக்கரவர்த்தி, விவேகானந்த நகர் மற்றும் நிவேதிதா நகர் காவல்நிலைய பிரதிநிதிகளாக சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரவன் மற்றும் திவாகர், ஃபாரன்ஸிக் சைகாலஜிஸ்ட் செந்திலதிபன், அரசாங்க மருத்துவர் வைஷ்ணவி - இவர்களோடு மாஜிஸ்ட்ரேட்டும் காத்திருக்க, அமைச்சர் வந்ததும் அவரவர் ரேங்க்கிற்கு உரித்தான இருக்கைகளில் அமர்ந்தனர்.

ப்ரொஜக்ட்டர், வெண்திரை, கம்ப்யூட்டர் டெர்மினல், அவைகளை இயக்க இன்ஸ்பெக்டர் திலீப் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சிவா இருவரும் தயார் நிலையில் இருந்தனர்.

இன்னும் தீர்க்கப்படாத, ஒன்றரை மாத காலத்தில் நிகழ்ந்த ஆறு கொலைகள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தவே இந்த ஹை லெவல் அவசர மீட்டிங்.

தன் மைக் ரிஸீவரை சரியாகப் பொருத்திக் கொண்ட ஐஜி, பேசத் தொடங்கும் முன் தொண்டையை செரும, உள்துறையமைச்சர் அவரை முந்திக்கொண்டு சீறினார்.

“என்னதான்யா நடக்குது அந்த விவேகானந்த நகர்ல? அனுமார் கோவில் போறவனாட்டம் சனிக்கிழமை தவறாம கொலை பண்றான், அதுவும் ரெண்டு ரெண்டா. மொத்தமே அஞ்சு மெயின்ரோடும் எட்டு குறுக்கு தெருவும் இருக்கற இடத்துல இத்தனை நடக்குது… இன்னும் கொலையாளியக் கண்டு புடிக்காம என்னத்தையா சிரைக்கிறீங்க? எந்த மினிஸ்டரை பார்த்தாலும் தாளிக்கறான் ப்ரஸ்ஸுல. உங்களை விட நியூஸ் பேப்பர் படிக்கற பொதுமக்கள் அதிகம் துப்பு துலக்குவாங்க போல. இதுவரைக்கும் சந்தேகமா கூட ஒரு பேரையோ, ஆளையோ சொல்லலை நீங்க. இதுல எங்க கட்சி கவுன்சிலரோட ஆளுங்களை புடிச்சு லாடங் கட்டி இருக்கீங்க”

இதுபோன்ற அலட்சியம் தெறிக்கும் பேச்சை கேட்டுப் பழகிய ஐஜியும் கமிஷனரும் முகம் மாறாது அமைதி காக்க, பிரதாப் இறுகினான். டாக்டர் வைஷ்ணவி மெதுவே தன் பார்வை இலக்கை மாற்றிக்கொண்டாள்.

ஐஜி “ஸார், எங்க டீம் ஒவ்வொரு ஸ்டேஜா தீவிரமா விசாரணை செஞ்சுக்கிட்டுதான் இருக்காங்க. ஆனா, இந்தத் தொடர்கொலைகள், அவை செய்யப்பட்ட விதம், அதை இணைக்கற புள்ளிகள்னு எல்லாமே ரொம்ப வித்தியாசமாவும் சவாலாவும் இருக்கு. குற்றவாளியை கூடிய விரைவுல புடிச்சிடுவோம் சார்”

“அப்படி என்னத்தை விசா…ரணை செஞ்சு கிழிச்சீங்கன்னு காட்டுங்க, நானும் பாக்கறேன்”

கமிஷனர் ஜார்ஜ் செபாஸ்டியன், முதல் இரட்டைக் கொலைகளில் தொடங்கி, டாக்டர் தனபால் கொலை வரை, அதன் பொதுவான அம்சங்களை, தொடர்புகளை, ஒற்றுமைகளை சுருக்கமாகச் சொன்னவர்,

“ இனி இந்தக் கேஸை ஹேண்டில் செய்யற ஏசிபி பிரதாப் விசாரணை குறித்து விரிவான விளக்கம் தருவார்” என்று பொறுப்பை கை மாற்றினார்.

ஏசிபி பிரதாப்

“ஸார், இதுல சுந்தரியோட கொலையை செஞ்சது அந்த கவுன்ஸிலர் சக்கரபாணியோட ஆளு ராமலிங்கம்தான்னு உறுதி ஆயிடுச்சு. விக்டிம் சேலைல இருந்து கிடைச்ச முடியும் ராமலிங்கத்தோட முடியும் ஒண்ணுதான்னு நேத்து நைட்டுதான் ஃபாரன்ஸிக்ல உறுதிபடுத்தினாங்க…” என்ற பிரதாப் சற்றே தயங்கினான்.

“என்ன மிஸ்டர் பிரதாப்?”

“கொலையான சுந்தரி ஒரு டிவோர்ஸி. அவங்களுக்கும் ராமலிங்கத்துக்கும் ரகசிய தொடர்பு இருந்திருக்கு. அதை அவனே ஒத்துக்கிட்டான்”

“அப்புறமென்ன?”

“அந்த வீடு சுந்தரியோட எக்ஸ் ஹஸ்பண்ட் அவங்களுக்கு அலிமோனியா கொடுத்தது. அதைத்தான் கவுன்ஸிலருக்காக எழுதி வாங்கப் போன ராமலிங்கம், சுந்தரி எதிர்க்கவும் நடந்த அடிதடி, தள்ளு முள்ளுல அவங்க செத்துட்டாங்க. அதே ஏரியாவில நடந்த கொலைகளை பத்தி தெரிஞ்ச ராமலிங்கம், சுந்தரியோட மரணத்தையும் அதே மாதிரி செட்அப் செஞ்சுட்டு போய்ட்டான். காப்பி கேட் மர்டர் மாதிரி”

அமைச்சர் “நல்லா சொல்றீங்கையா டீட்டைலு! வினோதமான ஆளுய்யா அந்த ராமலிங்கம். எல்லாரும் சின்ன வீட்டுக்கு வீடு வாங்கித் தருவாங்க, இவன் என்னடான்னா சின்ன வீட்டோட வீட்டையே எழுதி வாங்கறான்” எனவும் அதிகாரிகள் அனைவரும் வேறு வழியின்றி இளித்து வைத்தனர்.

சிரிப்பு அடங்கக் காத்திருந்த பிரதாப் “ராமலிங்கம் அந்த வீட்டை மட்டுமில்லாம, முதல்ல கொலையான செல்வநாயகம் கிட்டயும், இரண்டாவதா கொலையான மதனகோபாலோட மாப்பிள்ளை ரோஷன் கிட்டயும் அவங்களோட வீட்டை விலைக்கு தரச்சொல்லி வற்புறுத்தி இருக்கான்”

“அதனால?”

“ரெண்டு கேஸ்ல ராமலிங்கம் வீட்டை விலைக்குக் கேட்ட பிறகு அந்த ஹவுஸ் ஓனரைக் கொன்னுருக்காங்க. இன்னொண்ணுல கொலை நடந்த பிறகு வீட்டைக் கேட்டிருக்கான். இதுல ஒரு கொலையைப் பண்ணினது, நிச்சயமா அவன்தான்னு ப்ரூவ் ஆயிடுச்சு. ஆனா…”

பிரதாப் கவுன்ஸிலர் பக்கமே திரும்பத் திரும்ப வருவதில் மூண்ட எரிச்சலை மறைக்காத அமைச்சர்,

“ஆனா என்னய்யா ஆவன்னா, வீட்டைக் கேட்டா எல்லா கொலையும் அவன்தான் செஞ்சதா ஆயிடுமா?”

“இந்த ராமலிங்கத்தை புடிச்சதால கவுன்ஸிலர் சக்ரபாணி ஸ்டேஷனுக்கு வந்து தகராறு பண்ணிட்டுப் போயிருக்காரு ஸார். அது மட்டுமில்லாம, விமல்ங்கற அடியாளுக்குத் தெரிஞ்ச ஒருத்தன், யார் கை எழுத்தைக் கொடுத்தாலும் அச்சு அசலா அதே போல எழுதித் தர்றான். அவனை வெச்சு…”

குறுக்கிட்ட அமைச்சர் “நீங்க கொலைக் கேஸை மட்டும் பாருங்க ஏசிபி ஸார். எவனாவது பினாமி இடத்தை தான் கவுன்ஸிலரா இருக்கற ஏரியாவுலயே வாங்குவானா?”

பிரதாப் “அங்கதான் சார் இடிக்குது. இது போல கொலை, தற்கொலை நடந்த வீட்டையெல்லாம் அவ்வளவு சுலபமா துணிஞ்சு யாரும் வாங்க மாட்டாங்க. அப்புறம் எப்படி…” என்று இழுக்கவும், ஓரிரு நிமிடங்கள் கனத்த மௌனம் நிலவியது.

அமைச்சரின் முகத்தில் தெரிந்த அதிருப்தியில் ஐஜி
கமிஷனருக்கு சைகை செய்தார். கமிஷனர்,

“ஏசிபி பிரதாப், கேஸோட டீடெயில்ஸ், ஸ்லைட்ஸை ப்ரொஜெக்ட்டர்ல போடுங்க” என்றவரின் தொனியில் “இந்தப் பேச்சு போதும்” என்ற கட்டளை இருந்தது.

“திலீப், சிவா, ஸ்டார்ட் ரோலிங்” என்ற பிரதாப், வெண் திரையில் வந்த படம் பார்த்துக் கதை சொல்லத் தொடங்கினான்.

இத்தனை வருட அனுபவத்தில் எத்தனையோ குரூரமான கொலைகளை, வினோதமான வழக்குகளை, கற்பனைக்கெட்டாத குற்றங்களைப் பார்த்துப் பழகி இருந்தபோதும், ஏதோ சட்டைக்கு ஹெம்மிங் செய்வது போல் தைக்கப்பட்டிருந்த உதடுகளைக் கண்ட அனுபவம் வாய்ந்த காவல்துறை அதிகாரிகளே அதிர்ந்து திகைத்தனர்.

‘எத்தனை குரூரம்?’ என்பதையே ‘ஹௌ க்ரூயல்!’, ‘gruesome’ , grisly” என ஆளுக்கொரு வார்த்தையில் சிலிர்த்துக் கொண்டனர்.

அமைச்சரே “மனுஷன் பாத்த வேலையாய்யா இது, ஒண்டி ஆளா இத்தனை கொடூரமா தடயமில்லாம கொல்ல முடியுமா? எத்தனை நெஞ்சுரப்பு இருந்தா இப்படி செய்வான்? அதெப்படி ஆபரேஷன் செய்யற மாதிரி கச்சிதமா தைச்சு வெச்சிருக்கான்? ஒருவேளை, கொன்னவன் டாக்டரா இருப்பானோ?”

பிரதாப் “இருக்கலாம், இல்லாமயும் இருக்கலாம். இது மாதிரி கொடூரத்தை, வன்முறையை, பர்வர்ஷனை வெளிப்படுத்தற குற்றங்கள்ல கொலையாளியோட உடல் பலத்தை விட, மனநிலையைதான் நாம யோசிக்கணும். அதைப்பத்தி ஃபாரன்ஸிக் சைக்காலஜிஸ்ட் செந்திலதிபன் விளக்குவார்”

அவர் ‘நான்தான் செந்திலதிபன்’ என்பது போல் கையுயர்த்தி, தன் பேச்சைத் துவங்கினார்.

“பொதுவா சொல்லணும்னா மனச்சிதைவு அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவங்க பலவிதம். இந்த ஆறுகொலைகளும் ஒரே மாதிரி தெரிஞ்சாலும், ஒன்னு ஒன்னும் தனிதான்”

“இரட்டைக் கொலைகள்ல ஒருத்தருக்கு ஹார்ட் அட்டாக், அந்த ஆக்ஸிடென்டல் கொலை கேஸ் சுந்தரி செத்துப்போனது பிரைன் ஹெமரேஜ்ல.

‘பார்க்க ஒரே மாதிரி, வீட்டுக் கதவைத் திறந்தவுடனே கண்ணுல பதியற படம் மாதிரி, கிட்டத்தட்ட பவர்ஃபுலான ஒரு சீன், ஒரு ஓவியம் மாதிரி… picturesque னு சொல்லுவாங்கள்ல அதுபோல…”

“என்னதான் குரூரம்னாலும் பார்த்ததும் ஈர்க்கற மாதிரியான இந்தக் காட்சியை உருப்போட்டு, உருப்போட்டு மனசுல பெயின்ட் பண்ணி வெச்சிருக்கற ஒருத்தராலதான் இத்தனை குரூரமா, பதட்டமில்லாம, தடயமில்லாம தப்பு செய்யமுடியும். ஸோ..”

ஓரிரு உயரதிகாரிகளே கொட்டாவியை அடக்கியும் அடக்காமலும் முகவாயைக் கையால் மறைக்க, அமைச்சர் “ஸோ, அதனால என்னய்யா, என்னதான் சொல்ல வர்ற? ”

முகம் சிவந்த செந்திலதிபன் தன்னை முயன்று கட்டுப் படுத்திக்கொண்டு தன் பேச்சைத் தொடர்ந்தார்.

“யாராலயாவது உடல் அல்லது மனரீதியா கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி, அதனால மனநலம் பாதிக்கப்பட்டு, தன் கடினமான அனுபவங்களால ட்ரோமால மாட்டிகிட்ட ஒருத்தரால கூட இத்தனை பிளான் செஞ்சு கொல்றதும், குறுகிய நேரத்துல இத்தனை வன்முறையாவும் கொடூரமாவும் தன்னோட முதல் கொலையிலேயே கொஞ்சம் கூட பிசிறில்லாம செய்யறது இம்பாஸிபிள், சான்ஸே கிடையாது”

அமைச்சர் , ஐஜியைப் பார்த்து “என்ன ஐஜி ஸார், விட்டா இந்தாளு கொலைகாரனுக்கு சிலை வைப்பான் போல” என்றார் நக்கலாக. ஆனால், இம்முறை எதிர்வினை இல்லாது போகவே, அமைதியை சகிக்க இயலாது, அவரே “மேல சொல்லுங்க” என்று கையசைத்தார்.

செந்திலதிபன் தன் விளக்கத்தைத் தொடர்ந்தார்.

“என்னோட அனுமானத்துல, இப்ப நடந்த இந்தக் கொலைகள் எதுவுமே, கொலையாளியோட முதல் அல்லது தொடர் கொலைகளின் ஆரம்பம் கிடையாது. சீரியல் கில்லர்கள் ரூபாய்க்கு எட்டுன்னு கூறுபோட்டு கொலைசெய்ய மாட்டாங்க”

“தன்னோட இரையை குறிவெச்சு, கண்ணிவெச்சு, அவங்களுக்கு தன் மேல நம்பிக்கை வரவெச்ச பிறகுதான் கொல்லுவாங்க. இந்த கொலைகள்லயுமே ஃபோர்ஸ்ட் என்ட்ரி இல்லை, தள்ளு முள்ளு இல்லை. ஏதோ, சலூன் சேர்ல போய் உக்காருன்னு சொன்னது மாதிரி எதிர்ப்பே இல்லாம அல்லது குறைந்தபட்ச எதிர்ப்போட நடந்திருக்கு”

கமிஷனர் ஜார்ஜ் செபாஸ்டியன் “நீங்க சொல்ல வர்றது?”

“கொலையாளிக்கு இது முதல் கொலை கிடையாதுன்னு என்னால உறுதியா சொல்ல முடியும். இந்தக் கொலையாளியோட க்ரைம் எட்டு வருஷமோ, பத்து வருஷமோ அதுக்கு மேலயோ கூட இருக்கலாம், அப்பவே தொடங்கி இருக்கும்.

நீங்க இதை வேற எந்த ஃபாரன்ஸிக் சைக்காலஜிஸ்ட் கிட்ட வேணும்னாலும் கேட்கலாம்”

திவாகர் “அப்படீன்னா, இதே மாதிரியான கொலைகள் முன்னாலயும் நடந்து இருக்கு(ம்)ன்னு சொல்றீங்களா ஸார்?”

செந்திலதிபன் “இதே மாதிரி குரூரமான கொலைகள்னு சொல்ல முடியாது. அதெல்லாம் ரொம்ப சாதாரணமா கூட இருந்திருக்கலாம்.

பிகாஸ், இந்த மாதிரி அலட்சியமான, பொறுப்பில்லாத, உன்னால முடிஞ்சா என்னைப் புடிச்சுக்கோ’ன்னு போலீஸுக்கு சவால் விடற மாதிரியான reckless பிஹேவியர் கொலை செஞ்ச பழக்கத்துல, கொலை செய்யற ப்ராஸஸ் தர மனநிறைவுல (gratification), அந்தக் கணத்துல உலகத்தையே ஜெயிச்ச மாதிரி உணர்றதுல வர்ற அடுத்தடுத்த க்ரைம்ல அவங்களோட கொலை செய்யற முறைல கடுமையும் மாற்றமும் கூடிக்கிட்டே போகும்”

இப்போது கமிஷனர் செபாஸ்டியனே “செந்திலதிபன், பொதுவா இந்தக் கொலைக் குற்றவாளிகள் அதிலயும் குறிப்பா தொடர் கொலையாளிகள் சவால் விடற மாதிரி ஏதாவது ஒரு அடையாளத்தை விட்டுப் போவாங்க, பார்த்திருக்கோம். ஆனா, இங்க அது போல எதுவும் இருக்கற மாதிரி தெரியலையே”

மெலிதாகச் சிரித்த செந்திலதிபன் “அந்தக் கொலை நடந்த விதம், கதவைத் திறந்ததுமே அதிர்ச்சி தரக்கூடிய, கண்ணில் அறையும் அந்த குரூரமான காட்சிதான் இந்தக் குற்றவாளியோட காலிங் கார்ட்” எனவும் அங்கிருந்த அனைவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

தன் இடத்திலிருந்து சிறிது முன்னால் வந்து நின்று சல்யூட் அடித்த சப் இன்பெக்டர் சிவா,

“ஸார், ஒரு சந்தேகம். இந்தக் கொலையாளி முன்னால நடந்த கொலைகள் அல்லது குற்றங்கள் எதுலயாவது ஒரு சஸ்பெக்ட்டா, அதாவது சந்தேகத்துக்கு உரியவரா இருந்திருக்க வாய்ப்பு இருக்கில்லையா?”

“இருக்கு. ஆனா நூறு சதவீதம் இருக்குன்னும் சொல்ல முடியாது. யாராலயோ ஏமாந்து, சண்டைக்குப் போய், தாக்க முயற்சி செஞ்சு அல்லது தன்னையே விக்டிமா வெச்சு ஹார்ம் பண்ணிக்கறதுன்னு ஏதாவது செஞ்சிருந்தா, NCRB - National Crime Records Bureau ரெகார்ட்ல அவங்க பெயர் கண்டிப்பா இருக்கும்”

சிவா தயக்கத்துடன் “இது தொடர்பா இன்னொரு கேள்வி ஸார். இந்தக் கொலைகளுக்கான குற்றவாளி தன்னோட அடையாளத்தை மாத்திக்கிட்டு நமக்கு நடுவுல, நம்ம கூடவே இருக்க வாய்ப்பு இருக்கு இல்லையா?”

“பிரில்லியன்ட் கொஸ்டின் சிவா. வாய்ப்பு மாத்திரம் இல்லை, இந்தக் கேஸ்ல அதுதான் உண்மையா இருக்கும்”

“தேங்க் யூ ஸார்” என மீண்டும் ஒரு சல்யூட்டுடன் தன் இடத்திற்குச் சென்றான் சிவா.

ஐஜி “டீ பிரேக்” என அறிவித்ததும் அமைச்சர், ஐஜி, கமிஷனர் செபாஸ்டியன் ஆகிய மூவரைத் தவிர, மற்றவர்கள் பக்கத்தில் இருந்த அறைக்குச் சென்று டீ, கேக், வடை, சமோஸாவை முற்றுகையிட, அந்த மூவருக்கும் இருந்த இடத்திலேயே பரிமாறப்பட்டது.

தன் கைக் கடிகாரத்தைப் பார்த்த அமைச்சர் “அஞ்சு நிமிஷம்” என நேரம் வாங்கிக்கொண்டு, முதல்வரிடம் இங்கு நடந்ததை சுருக்கமாகத் தன் மொபைலில் அழைத்துத் தெரிவித்தார்.

அதிகாரிகள் அனைவரும் மீண்டும் நாற்காலிகளை ஆக்கிரமிக்க, மீட்டிங் தொடர்ந்தது.

உள்துறை அமைச்சர் “தமிழ்நாட்ல உங்களைப் போல திறமையான போலீஸ் அதிகாரிகள் இருக்கும்போது, இந்த வழக்கு சிபிஐ கைக்கு போகக் கூடாதுங்கறதுல முதல்வர் உறுதியா இருக்கார்.

ஃபாரன்ஸிக் சைக்காலஜிஸ்ட் செந்திலதிபன் இந்தத் தொடர் கொலைகள் முன்னாலயே தொடங்கி இருக்கலாம்னு கருத்து தெரிவிச்சதாலயும், இந்தக் கொலைகள் இனியும் தொடர வாய்ப்பு இருப்பதாலயும், நாம ஒரு SIT ஃபார்ம் பண்ணலாம்னு முதல்வர் நினைக்கறார் ”

ஐஜி உடனடியாக “ரொம்ப சரியான முடிவு ஸார். இது போல பழைய கேஸ்களை ஏதாவது இருக்கான்னு தேடவும், ஆராயவும், தீவிர விசாரணைக்கும் எங்களுக்கு நேரம் கிடைக்கும்” என்ற ஜஜி கமிஷனரை நோக்கினார்.

அமைச்சர் “செய்ங்க”

கமிஷனர் செபாஸ்டியன் “இதுவரை இந்த கேஸ்ல சிறப்பா செயல்பட்ட ஏசிபி பிரதாப்பே ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீமை லீட் செய்யட்டும். அவரோட இன்ஸ்பெக்டர் திலீப், சப்-இன்ஸ்பெக்டர் திவாகர், சப்- இன்ஸ்பெக்டர் சிவா, இன்னும் ஓரிரு அதிகாரிகள் சேர்ந்து ஒரு குழுவா இயங்குவாங்க. சரிதானே பிரதாப்?”

எழுந்து நின்று “எஸ் ஸார்” என்று விறைப்பாக ஒரு சல்யூட் அடித்தான் பிரதாப்.

அமைச்சர் புறப்பட்டுச் சென்றதும், இருபது நிமிடங்களுக்கு மேல் வழக்கு தொடர்பான மேலதிக விவரங்களை விவாதித்து, வெளியில் வந்தவர்களுக்க செய்தியாளர்கள் காத்திருத்தனர்.

கமிஷனர் ஜார்ஜ் செபாஸ்டியன் “இந்த தொடர்கொலை வழக்கை விசாரிக்க ஏசிபி பிரதாப் தலைமையில ’ சிறப்பு விசாரணைக் குழு’ அமைச்சிருக்கோம். அதோட, அந்தப் பெண் சுந்தரியை கொலை செய்தது ராமலிங்கம்ங்கறது உறுதி ஆயிடுச்சு. ஆல்ரெடி அவன் எங்க கஸ்டடிலதான் இருக்கான்”

“நல்லா போட்டான்யா, வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும்” என செய்தியாளர்களின் நடுவிலிருந்து குரல் வர, சிரிப்பலை பரவியது. கமிஷனரே தன் புல்லுக்கட்டு மீசையில் புன்னகையை ஒளித்தார்.

“என்ன போலீஸ்கார், திடீர்னு என்னாச்சு உங்களுக்கு?” என்ற நைனிகா, பிரதாப்பை ஒரு முறை சுற்றி வந்து பார்க்கவும், பிரதாப் சிரித்தான்.

“ஏன், எனக்கென்ன?”

“இல்ல, என்கூட ரெண்டு நிமிஷம் பேசக்கூட நேரமில்லாத நீங்க, தொடர்ந்து மூணாவது நாளா என்னை இழுத்துக்கிட்டு கஃபே, கஃபேயா சுத்தறீங்களே, என்ன மேட்டர்?” என்று கேள்வியாகப் புருவம் உயர்த்தினாள்.

“மேட்டரா, நான் என்னடீ செஞ்சேன்?”

நைனிகா “அதான் ஒண்ணும் செய்யலையே” என்று முனகினாள்.

அளவாகப் புன்னகைத்த பிரதாப், அமைதியாக வெய்ட்டர் கொண்டு வைத்த சாஃப்ட் ஷெல் டாகோஸை நைனிகாவிடம் நகர்த்தினான்.

தன்னையே பார்த்துக்கொண்டிருந்த அவனது கண்களை சந்தித்தவள் “என்கிட்ட என்ன சொல்லணும் உங்களுக்கு?”

“நியூஸ் பார்த்தியா நைனி?”

“ம், வாழ்த்துகள் ஏசிபி ஸார். ஐயா இனிமே 24×7 பிஸிதான்”

எந்த ரியாக்ஷனும் காட்டாது மௌனமாக இருந்தவன், சட்டென, அவள் கையைப் பிடித்துத் தன் கன்னத்தில் அழுத்திக்கொள்ளவும், நைனிகா கண்கள் விரிய, தடுமாறினாள்.

“நைனிமா, நான் சொல்ல வர்றதை சரியா புரிஞ்சுப்பியா?”

நைனிகாவின் உள்ளுணர்வு ஏதோ பெரிதாக வரப்போகிறது என்று சொல்ல, தன் கையை உருவிக்கொள்ள முயற்சி செய்ய மட்டும்தான் அவளால் முடிந்தது.

கம்பீரமான காவல்துறை அதிகாரியான பிரதாப், தான் கேட்கப் போவது தனக்கே பிடிக்காமல், குரலை சமன்படுத்திக்கொண்டு “இந்தக் கேஸ் முடியற வரைக்கும் நாம வேணா நம்ம கல்யாணத்தை தள்ளிப் போடலாமா?” என்றவன், கண்டதெல்லாம் வெற்றி வேல் தடக்கைக் கொற்றவையைத்தான்.

சிபி பிரதாப்பின் அலுவலகம்.
அவனெதிரே திலீப், திவாகர் இருவரும் அமர்ந்திருந்தனர். இடையே இருந்த மேஜையில் நடுநாயகமாக இருந்தது, டாக்டர் தனபாலின் வீட்டில் கிடைத்த கவர்.

பிளாஸ்டிக், பேப்பர், ரெக்ஸின், லெதர் இவை எவற்றாலும் செய்யப்படாத அதை கவர் என்று சொல்வதை விட சுருக்குப் பை என்றுதான் சொல்ல வேண்டும். நல்ல கருநீல நிறத்தில் நகைக் கடைகளில் கிடைக்கும் வெல்வெட்டினால் ஆன சிறிய சுருக்குப் பை அது.

அதனுள் இருந்த பொருளை வெளியில் எடுத்த பிரதாப் மற்ற இருவரையும் ஏறிட்டுப் பார்த்தான்.

“லாக்கர் சாவியா ஸார், கொலைன்னு வேற சொல்லிட்டீங்க, இப்ப இது எந்த பேங்க்கோடதுன்னு வேற கண்டு புடிக்கணுமே ஸார்” என்ற திவாகரைப் பார்த்த பிரதாப்பின் பார்வையில் கடுமை ஏறியிருந்தது.

“அரசாங்கம் நமக்கு சம்பளம் குடுக்கறதே, அதுக்குதான் திவாகர்”

“ஸார்”

கதவைத் தட்டி பரபரப்பாக உள்ளே வந்த சிவா, கண்களால் பிரதாப்பிடம் அனுமதி கோரி, அங்கிருந்த கண்ணாடி ஜக்கைத் தூக்கி அதிலிருந்த தண்ணீரை கடகடவென வாயில் சரித்துக் கொண்டு நிமிர்ந்தவனுக்கு மூச்சு வாங்கியது.

சிவாவின் குறிப்பறிதலிலும், சுறுசுறுப்பான செய்தி சேகரிப்பிலும் ஈர்க்கப்பட்டிருந்த பிரதாப் “ரிலாக்ஸ் சிவா, முதல்ல உக்காருங்க. பதட்டப்படாம விஷயத்தை சொல்லுங்க” என்றான் இதமான குரலில்.

அமர்ந்த சிவா, “ஸார், குழந்தை நல மருத்துவர்னு போர்டு போட்டுட்டு இருக்கற அந்த டாக்டர் தனபால், ஒரு டாக்டரே இல்ல ஸார். அவன் ஒரு போலி. ஃப்ராடு. பக்கா 420. அந்தாளு ப்ளஸ் டூ கூட பாஸ் பண்ணல ஸார்” என்ற சிவாவிற்குத் தன்னை சமன்படுத்திக்கொண்ட பின்பும் படபடப்பு அடங்கவில்லை.
 
நல்லா போகுது.... கார்த்திகா
சக்ரவர்த்தி
 
Super super🤩🤩🤩🤩🤩
கில்லருக்கு ஏதும் childhood டிராமா இருந்து இருக்கு.....
அது தான் இப்ப அவங்களோட இரையை சரியா குறி வெச்சி தாக்குது....

எனக்கு என்னமோ நைநி மேல தான் சந்தேகமா இருக்கு.....

அவளும் இப்படி டிராமா ஏதும் face பண்ணி இருப்பாளோ அப்படினு.....

வயசானவங்க....தூங்க கஷ்டபடுவாங்க.....

அவங்களுக்கு கூட இந்த டீ பேக் இவ intro கொடுத்து இருக்கலாம்....

அதனாலா வந்த பழக்கமா இருக்கலாம்....

Epi by epi செம்ம interesting ஆ போகுது கதை....

திவா, திலக் ஆ விட சிவா இன்னும் 🔥 இருக்கான்🤩🤩🤩🤩🤩
 
உறையுள் உறையும் உதிரம்...!
(அத்தியாயம் - 10)


எனக்கென்னவோ, நைனிகா கிட்ட கூட ஏதோ சம்திங் பிஷ்ஷியா தெரியுற மாதிரி இருக்குது. தவிர, அந்த டாக்டர் தனபாலுக்கு டீ தூள் ரிகமண்ட் பண்ணதும் நைனிகா தான்னு தோணுது. அந்த டாக்டர் தனபால் கூட சைக்கோபாத்தா இருக்க சான்ஸ் இருக்குது.
எஸ் ஐ சிவா எல்லாரையும் விட ரொம்ப ஆக்டீவ்வா இருக்கிறான்.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
அருமையான பதிவு
 
Nice... Previous epi la naini and prathap pesunathu ithu thana that means marriage thalli podurathu or vera vishayama... Enakku yen naini mela doubt varuthu.
 
எனக்கு ஆரம்பத்திலிருந்து அந்த டீ பாக்கெட் மேல தான் டவுட்டா இருக்கு ஏதோ சம்திங் இருப்பதாக தோணுது.
 

Latest threads

Top Bottom